Thursday, February 09, 2006

பெறுநர் : தாயுமானவள்

சமர்ப்பணம் : சிவனின் வேலையையும் சேர்த்து செய்யும் பிரம்மாக்களுக்காக....


காதலைப் பற்றி
கவிதை எழுதி
கல்லடி வாங்கி
காட்டுக்குள் திரிந்து
யோகியைத் தேடினான் போகி.

அதே மரத்தடியில் யோகி.

யோகியின் தியானம் கலைத்து
யோசிக்கச் சொன்னான்
போகி.
உலகிலேயே உயர்ந்த
உறவு எது?

யோகி சொன்னான்.
பட்டினத்தாரையும் பதறவைத்த
அம்மாவின் அந்தமும்
தாயின் தலையும்
சேர்ந்து ஆன
மாதா!

போகி சொன்னான்.
அம்மா என்ற பதத்தை
வடக்கே ஒருத்தரும்,
மாதா என்ற பதத்தை
மேற்கே ஒருத்தரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
தாய் என்றே
சுருங்கச் சொல்லுங்கள்.

உங்கள்
தாய்ப் பாசத்துடன்
தகராறு செய்யவே
தலைதெறிக்க ஓடிவந்தேன்.

விதிகளைப் பார்த்து
வியந்தது போதும்
விதிவிலக்குகளைக் கொஞ்சம்
விலக்கப் பாருங்கள்.

தாய்ப் பாசத்திற்குப்
பகைவர் பலர்.

முதலாம் எதிரி-பதிபக்தி.

கண்ணற்ற கணவனுக்காகக்
கண்கள்கட்டிக் காணமறுத்த
காவியப்பெண்ணின்
காலடித்தொடர்பவர்கள்
கலியுக மனைவிகள்!

கட்டியவன் வேண்டுமா
கருவறையில் வசித்தவர்கள் வேண்டுமா என்றால்
கருவறையையும் உயிரறையாக்கும்
கணவனே கண்கண்ட
கடவுள் என்பார்கள்.....
உயிரைச் சமன்படுத்தத் தெரியாத
ஆறறிவுக்காரிகள்!

தாலியால் ஏன்
தாய்ப்பாசத்திற்கு
வேலி போட்டீர்கள்?

சாட்சிகள் இருந்தும்
சாட்சிகள் இல்லா
தாம்பத்தியம்
தாய்ப் பாசத்தைத்
தோற்கடிப்பதெப்படி?

உண்மைதான் சொல்கிறேன்
ஆறு பிள்ளைகள் பெற்றும்
ஆறும்
அடுத்த வேளை கஞ்சிக்கே
அவதிப்பட
அடுத்த வாரிசு தேடும்
அதிசயப் பிறவிகளை
அன்றாடம் பார்க்கிறேன்
அரசமரத்தடியில்!

இரண்டாம் எதிரி-கற்பு என்னும் ஒருபால் கட்டுப்பாடு.

நான் நினைக்கிறேன்
குந்திராணிதான்
துவங்கி வைத்திருப்பாள்.
இன்று
பல குந்திராணிகள்
கற்பைச் சுத்தப்படுத்த
கர்ணன்களைப்
குப்பைகளாகப் போடுகின்றனர்
தொட்டிகளில்!

அது ஒரு விபத்து,
ஏமாற்றப்பட்டேன்,
நாளாகிவிட்டது,
கல்யாணம் நெருங்குகிறது,
எதிர்பார்க்கவே இல்லை,
சில்லறை இல்லை
இப்படி
ஏதோ ஒரு
காரணம் சொல்லித்
தப்பித்துக் கொள்ளலாம்
இன்றைய குந்திராணிகள்!

ஆனால்
பிச்சைத் தொழில்,
அனாதை ஆசிரமம்,
தத்துப்பிள்ளை,
பாலியல் தொழில்,
உறுப்புக் கடத்தல்
இவற்றில்
ஏதேனும் ஒன்றில்
மாட்டிக்கொள்கிறார்கள்
இன்றைய கர்ணன்கள்!

இதற்குப் பெயர்தான்
ஜென்மப் பாவமா?

அடுத்த எதிரி-வறுமை.

இன்னும்கூட
செய்திகள் சொல்கின்றன
சாம்பார்சட்டியிலும்,
நெல்லிலும்,
கள்ளிப்பாலிலும்
கொல்லப்படுகின்றன
பெண்சிசுக்கள்!

உங்கள் தாய்ப்பாசம்
நினைத்திருந்தால்
தடுத்திருக்கலாமே?
முடியாவிட்டால்
அடுத்த சிசுவைத்
தடுத்திருக்கலாமே?
ஆனால்
பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்கள்
'பிரசவம்' என்று!

பாவம்
பாலியல் தொழில் பெண்கள்!
அவர்கள்
ஆண்சிசுவையும் கொல்வதுண்டு!
தொழிலுக்குத் தடையாய்ப் போனதால்!

ஆதலால் சொல்கிறேன்
"ஈன்றாள் பசிகாண்பா ளாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
எனக் குறளிட்டது போதும்
'அன்பாராய்தல்' என
ஓர் அதிகாரமிட்டு
முதல் குறளாய் எழுதுங்கள்.....
"அகப்பை பசிகாண்ப தாயினும் செய்யற்க
மக்கள் பாதிக்கும் வினை"

யோகி சீறினான்.
போதும் நிறுத்து!
பத்துத் திங்கள்
சுமந்து பெற்றெடுக்கும்
தாய்ப்பாசத்தின் அருமை
தெரியாதவனே!

போகி தொடர்ந்தான்.
சுமப்பதற்காகச் சுமக்கும்
பெண்களைப்
பழிப்பதில்லை நான்.
இவ்வகையினர் இல்லாமல்
இவ்வுலகம் இல்லை.

சுமந்ததால் சுமக்க மறுக்கும்
பெண்களைத்தான்
பழிக்கிறேன் நான்.

இன்னும் சொல்கிறேன்
கேளுங்கள்.

இந்தோனேஷியக் காட்டுத்தீயில்
சிறகுகள் மூடிப்
பத்துக் குஞ்சுகள்
காத்திருந்ததாம்
கருகிப்போன தாய்க்கோழி!

தன் நிழலில் வளரும்
கன்றுகளைப் பாதிப்பதில்லை
வெட்டப்படும் வாழைக்கன்று!

தன் ரத்தம் தந்து
குஞ்சுகளின் பசி போக்குமாம்
பெலிகன் என்ற பறவை!

இயற்கையால் சபிக்கப்பட்ட
பாம்புகூட
எல்லாக் குட்டிகளையும்
பதம் பார்ப்பதில்லை!

ஆனால்
தாய்வீடு செல்ல
தலைவன் மறுத்தாலோ,
மாமியார் விசயத்தில்
மூக்கை நுழைக்க மணவாளன் மறுத்தாலோ,
சிறு வருத்தத்தில்
கண்கண்ட தெய்வம் அடித்தாலோ
இவற்றுடன்
சம்மந்தமில்லாக் குழந்தைகளுடன்
தன்னையும் கொலைசெய்து கொள்வது
வீரத்தமிழ்ப்பெண்கள்தான்!

சுட்டிக் குழந்தையை
washing machineல் போட்ட
அமெரிக்கத் தாயும் உண்டு!

ஹிட்லர் செய்தால்
கொடுங்கோல்!
நல்லதங்காள் செய்தால்
பச்சைப்புடவை பாராட்டு!
இதுதானே
உங்கள் சட்டம்!

பிரசவமும்,
தாய்ப்பாலும்
ஒத்திவைக்கப்படுகின்றன
அழகுக்குத் தடையாய்த் தெரிவதால்!

இயந்திர உலகில்
வாடகைக்குக் கிடைக்கும்
கருப்பைகள்கூட!

வருமானத்துக்காகப்
கோரமாக்கப்படுகின்றன
குழந்தைகளின் முகங்கள்!

வந்த விலைக்கு
விற்கப்படுகின்றன
பிரம்மனின் புதியவர்கள்!

வேறு எந்த
மிருகத்துக்கும் தெரியாது
கள்ளிப்பாலின் மருத்துவக்குணம்!

பறவைகளில் இல்லை
கூடு குஞ்சுகள் திட்டம்.
விலங்குகளில் இல்லை
வளை குட்டிகள் திட்டம்.
உங்களில் உண்டு
தொட்டில் குழந்தைகள் திட்டம்!

வளர்ந்த குஞ்சுகளைக்
கொத்தி விரட்டுமாம்
கோழி!

ஆனால்
நீங்களோ
பிள்ளைகளின்
எப்பேர்பட்ட தவறையும்
மன்னிக்கிறீர்கள்.

இப்படி ஒரு பாசம்
தேவைதானா?
இது தொடர்ந்தால்
குருவிடமே அழகுதேடும்
கேடுகெட்ட மனிதயினம்
தாயிடம்கூட.....

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

சரி!
இனிமேலாவது
பதிபக்தி,
ஆணாதிக்கம்,
வறுமை,
சம்பிரதாயங்கள்,
குருட்டுப்பாசம்
இவற்றை விட்டுவிட்டு
தாய்ப்பாசத்தின் பெருமையைப்
பெண்கள் காக்கட்டும்!

இல்லையேல்.....
தமிழ்த் தாய்ப்பாசம்
எகிப்திய மம்மியாய்ப் போகலாம்!!!

-ஞானசேகர் (போகி)

(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Topic was simply superb.
good stuff.
Go ahead... man...!

premkalvettu said...

Try to publish only yogi pogi here ok others let it be there in ur other blogspot.

And abt this "No comments now" bcoz we have discussed this already.

Thekkikattan|தெகா said...

சேகர், ரெம்ப அருமையா எழுதிரீங்க. உங்களின் ஒவ்வொரு படைப்பிலும் உயிர் இருப்பதை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்பு,

தெகா.