Monday, February 13, 2006

நள்ளிரவில் சூரியன்

காயங்கள் செய்து
காணாமல் போயிருந்தான்
போகி.

நீண்ட தேடுதலுக்குப்பின்
தனியறை ஒன்றில்
போகியைக் கண்டான்
யோகி.

யோகியே ஆரம்பித்தான்.
இந்திரனில் ஒளிவட்டம் பார்த்து
இவ்வுலகமே பயந்துபோக
இங்கென்ன செய்கிறாய்?

போகி சொன்னான்.
சந்திரனின் ஒளிவட்டம் காண
சந்தோஷமாய்க் காத்திருக்கிறேன்.

யோகி கேட்டான்.
அபூர்வம் சொல்கிறேன்.
அச்சப்படாமல்
அன்றாடம் பார்க்கும்
அற்ப சந்திரவட்டத்தை
அதிசயிக்கிறாயே?

போகி சொன்னான்.
இருக்கும் அதிசயங்கள் ரசிக்க
உங்களுக்கு நேரம்
இல்லாமல் போனதால்
புதிதாய்
நடக்கும் ஆச்சர்யங்கள் பார்த்து
அதிசயிக்காமல்
அச்சப்பட்டு போகிறீர்கள்.

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.
வெளிச்சத்தில் வாழ்ந்து வாழ்ந்தே
இரவின் ரம்மியம்
ரசிக்காமல் போனீர்கள்.
சூரியனின் அதீதப் பிரகாசத்தில்
நட்சத்திரங்களைக்
குருடாக்கிப் போனீர்கள்.

கலைடாஸ்கோப் போன்ற
உங்கள் வாழ்க்கையில்
உங்கள் விஞ்ஞான ஒளிபட்டு
வண்ணங்களாய்ச் ஜொலிக்க
சொக்கிப் போனீர்கள்.
ஆனால்
அதில்
உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்
உருளுகின்றன உங்களின் பாரம்பரியங்கள்!

கருவறை என்னும்
கருப்பில் பிறந்த நீங்கள்
நாகரீகம் என்ற ஒப்பனையில்
இயந்திர வாழ்க்கை என்னும்
வேஷம் போடுகிறீர்கள்
அதிக கூலிக்காக!

யோகி கேட்டான்.
நாங்கள் செய்யும்
பகல் வேலைகள்
எங்கள் இரவுகளை
எப்படி இருட்டாக்கும்?

போகி பதில் சொன்னான்.
உங்கள் பகல்களில்
சூரியன்கள் கூடிவிட்டன.
உங்கள் ஆதவனின்
அதீத வெப்பத்தால்
இரவின் பனித்துளிகள்
காணாமல் போயின.

உங்கள் பகல்களின்
வரவு செலவுகள்
உங்கள் இரவுகளில்
நியாயத்தீர்ப்பிடப் படுவதில்லை.
இதனால்
உங்கள் பகல்கடன்கள்
உங்கள் இரவையும்
வட்டியில் விழுங்குகின்றன!

உங்கள் பகல்களில்
சம்பாதிக்கப்போய்
உங்கள் இரவுகளில்
அதை வீடு சேர்க்க மறந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
அணைத்த விளக்குகளை
உங்கள் இரவுகளில்
மீண்டும் ஒளியேற்ற மறந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
கிணறு வெட்டப்போய்
உங்கள் இரவுகளில்
பூதம் கிளப்பிவிட்டீர்கள்!

உங்கள் பகல்களில்
அமிர்தம் எடுக்கப்போய்
உங்கள் இரவுகளில்
ஆலகாலம் கொண்டு வந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
கண்ணம்மாவை நனவாக்கி
உங்கள் இரவுகளில்
செல்லம்மாவைக் கனவாக்கிப் போனீர்கள்!

உங்கள் பகல்களின் இறைவன்
சூரியன்.
அவன்
காயங்களின் கலவை.
அவனை ஆதரித்து ஆதரித்தே
உங்கள் இரவுகளின் இறைவன்
சந்திரனைக்
களங்கங்களினால்
காயமாக்கிப் போனீர்கள்!

உங்கள் பகல்களில்
வரங்கள் வாங்க
நீங்கள் செய்யும் தவங்கள்
தாய்ப்பூமியைச்
சாபமாக்கிப் போவதைக்
கொஞ்சம் தவம் நிறுத்திக்
கண்திறந்து பாருங்கள்!

யோகி கேட்டான்.
பகலில் காரியங்கள்
இல்லாமல் போனால்
பகலும் இரவும்
இல்லாமல் போகுமே?

போகி பதில் சொன்னான்.
நான் கேட்பதெல்லாம்
இயந்திர வாழ்க்கை குறைத்து
இரவை ரசிக்க
காலம் செய்யுங்கள் என்பதே.

கண்ணின் வெள்ளை
கருப்பைக் காப்பதைக்
கணநேரம் ஒதுக்கி
யோசித்துப் பாருங்கள்!

உங்கள் வாழ்க்கை என்பது
கண்ணின் கட்டுமானம் போல்
அமையட்டும்.
கருப்பும் இருக்கட்டும்.
வெள்ளையும் இருக்கட்டும்.

பிறப்பு முதல்
இறப்பு வரை
கருப்பு வளராமல்
அப்படியே இருக்கட்டும்.
பிறப்பு முதல்
நடுத்தரம் வரை
வெள்ளை மட்டும்
வளரட்டும்.
இறப்பு வரை
இவ்வளவே
இருந்துவிட்டுப் போகட்டும்.

கருப்பு-வெள்ளை
இடம் மாறினாலோ,
கருப்பின் வீரியம்
குறைந்தாலோ,
கருப்பை வெள்ளை
ஆக்கிரமித்தாலோ
பாதிக்கப்படுவது
உங்கள் பார்வைதான்.

உள்ளாடை வெள்ளையாய்,
வெளியாடை கருப்புமாய்ப்
போகும் ஒருவன்
உள்ளாடை கருப்பாய்,
வெளியாடை வெள்ளையுமாய்ப்
போகிறவனைப் பார்த்து
முட்டாள் என்று
சொன்ன கதையாய்...................

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

சரி!
ஒன்று மட்டும்
ஞாபகம் செய்கிறேன்.
வெள்ளை என்பதில்
எல்லா நிறங்களும் உண்டு.
கருப்பு என்பது தனி.

நீங்கள் செய்யும்
அர்ப்பணிப்புகளும்,
அன்பளிப்புகளும்,
ஆதரவுகளும்,
கரகோஷங்களும்,
நன்கொடைகளும்,
நிவாரண உதவிகளும்
வெள்ளைகளுக்கு
என்றாகும் போது..........
நீங்கள் நினைப்பதுபோல்
கருப்பென்பது
வெள்ளையின்
ஒரு பிசிரல்ல!

-ஞானசேகர் (போகி)

2 comments:

Unknown said...

யோகி என்று இருக்கவே ஆன்மிகம் சார்ந்த கவிதையாக இருக்கும் என்று நினைத்து படித்தேன்.

/-- கருவறை என்னும்
கருப்பில் பிறந்த நீங்கள்
நாகரீகம் என்ற ஒப்பனையில்
இயந்திர வாழ்க்கை என்னும்
வேஷம் போடுகிறீர்கள் --/

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். எனக்கு இருட்டு மிகவும் பிடிக்கும்...

முல்லை அமுதன் said...

arputham
mullaiamuthan