Tuesday, February 07, 2006

பொய்க்கா(த)ல்கள்

சமர்ப்பணம் : (ரா.பார்த்திபன் சொன்னதுபோல்) வெளிவந்த பாதை போலவே வேறொன்றில் உட்புகத் துடிக்கும் செயலுக்குக் காதல் என்று பெயரிட்டவர்களுக்காக....



தியானத்தில் இருந்தான்
யோகி
வேட்டி இல்லாமல்
அருகில் அமர்ந்தான்
போகி

யோகியே ஆரம்பித்தான்.
ஏன் இந்த
அரைநிர்வாணப் பக்கிரி வேடம்?

போகி பகர்ந்தான்.
வழியில் கிடந்த
அனாதைக் கிழவனின்
முழு நிர்வாணம் மறைக்க
என்
அரை நிர்வாணத்தை அடகு வைத்தேன்

சற்றே தள்ளி அமர்ந்தான் யோகி.

போகி கேட்டான்.
உலகில் மாறாதது எது?

யோகி சொன்னான்.
ஐன்ஸ்டீன் பிறப்பால்
ஒளி மறைந்தது
காதல் மட்டும் மிச்சம்

போகியின் கேள்வி.
காதல் என்பதென்ன?

யோகியின் பதில்.
வரலாற்றைக் கேட்டென்
காதலைத் தெரியுமாவென்று
அது சொன்னது
காதல்
ஆப்பிளில் பிறந்தது
ஏதேனில் வளர்ந்தது
ஊனம் உடைத்தது
சாதியைச் சவுக்கால் அடித்தது
மதம் மறந்தது
எல்லை தாண்டியது
கருவிகள் செய்தது
பதவி துறந்தது
உயிர்விட்டது

காதல் கற்கவில்லை
காதல் கற்பிக்கப்படவுமில்லை
காதல் மணக்கவில்லை
காதலால் பலர் மணந்துகொண்டனர்

போகி இடைமறித்தான்.
அதே வரலாறுதான் சொன்னது
காதல்
சுவரேறிக் குதித்தது
பெற்றோரைவிட்டு ஓடிப்போனது
தற்கொலை செய்தது
சந்தேகப்பட்டது
காட்டிக்கொடுத்தது
வயது மறந்தது
குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது

பலர் காதலால்
இயற்கை எய்தினர்
காதல்
இயற்கையில் எஞ்சியது

யோகி கேட்டான்.
ஏன் கனியிருப்பக்
காய் கவர்கிறாய்?
நிலவை ரசி
களங்கத்தைப் பார்க்காதே

போகி சொன்னான்.
நிலவின் மறுபக்கத்தைப்
பார்த்தவன் நான்
எனக்குத் தெரியும்
சூரியன் உதிப்பதில்லை

போகி இன்னும் சொன்னான்.
உங்கள் காதல்
அசிங்கங்களை
அம்பலப்படுத்துகிறேன் கேளுங்கள்

முன்னால்போய்
செலவுகள் செய்வீர்கள்
தெரிவதில்லை
அது பைனான்ஸில் போடும் பணம்....

முத்தங்கள்
நீங்கள் ஏமாறுவீர்கள் என்பதற்கான
ISI முத்திரைகள்....

தன் இதயம்
உன்னிடம் இருப்பதாகச் சொல்லி
உன் தாயின் இதயம் கேட்பாள்
தனக்குப் பொருத்த....

காதலா? கல்யாணமா?
என்ற பட்டிமன்றத்தில்
காதலர்கள் இருப்பர்
எதிரெதிர் அணியில்....

கல்யாண check post பார்த்தாலே
காதல் கள்ளச் சரக்கைப் போட்டுவிட்டு
காதலர்கள் ஓடுவர்
திசைக்கு ஒன்றாக....

வெள்ளாடு நீங்கள்
அலங்கரிக்கப் படுகிறீர்கள்
தழுவல்களால்....

அடுத்த வருடம்
ரக்க்ஷா பந்தன் கட்ட
ஒத்திகை பார்ப்பாள்
மாரியம்மன் கோயில் தாயத்தில்....

காதல்வலி வந்ததால்
தாயின் பிரசவவலி
மறந்து போவீர்கள்....

அந்தப் புற்றின்
எட்டாவது துளையில்
பாம்பைப் பார்த்ததாக
யாராவது சொன்னாலே
பால்வைக்க வரமாட்டான்
அப்பாவி காதலன்....

யோகி இடைமறித்தான்.
கடவுள்
காதல்
இவை இரண்டும்
புரியாதவர்களுக்குப்
புரிந்தவர்களைப் பற்றி
புரியாது....

போகி சொன்னான்.
கடவுளைப் புரிந்துகொண்டதாக
சொன்னார் ஒரு சாமியார்
இப்போது
அவரைப் புரிந்துகொள்ள யாருமில்லை
இருக்கிறார்
தனிமைச் சிறையில்....

நான் ஒருநாள்
காதலின் அந்தப்புரத்தை
ஒளிந்திருந்து பார்த்துவிட்டேன்
இருட்டுக்குள் தெரிந்தது உண்மை....

கடவுளின் இலக்கு அன்பு
காதலின் இலக்கு காமம்

காதல்
காமத்தின் மரூஉ
காதல் நதி
காமம் கடல்
காதல் மணியோசை
காமம் யானை
காதல் கருப்பை உயிர்
காமம் மண்
காதல் சூரியகாந்தி
காமம் சூரியன்

காமம் இலக்கில்லை என்றால்
எவனும் பயணிக்க மாட்டான்
காதல் பாதையில்....

ஆயுதம் இருப்பதாகக்கூறி
எண்ணெய் தேடுவது போல
காதல் இருப்பதாகச் சொல்லி
காமம் தேடுகிறீர்கள்....

பகலில் current கொடுப்பதாகச் சொல்லி
இரவில் fuss எடுத்துக் கொள்கிறீர்கள்....

போகி இன்னும் சொன்னான்.
காதலில்
pass ஆனவர்களைவிட
காதலால் +2ல்
fail ஆனவர்கள் அதிகம்....

ஒரே வருடத்தில்
நான்கு பேரைக் காதலிக்கிறீர்கள்
அல்லது
நான்கு வருடமாய்
ஒருத்தியைக் காதலிக்கிறீர்கள்....

மீனுக்கு மூன்று நாள்
காதலுக்கு அறுபதுநாள்....

"போரில் ஜெயிக்க வேண்டும்
காதலில் தோற்க வேண்டும்"
-காதலர்களின் தாரகமந்திரம்....

காதலிக்கும் ஆணும்
காது குத்திக் கொள்ளும் ஆணும்
ஒரேபோல்
தெரிந்தே தோற்கின்றனர்....

இப்படி....
சதி
நம்பிக்கையின்மை
நம்பிக்கைத்துரோகம்
தற்கொலை
கோழைத்தனம்
சுயநலம்
ஊதாரித்தனம்
போன்ற பாடங்களைப் போதிக்கும்
காதலைப்....

அட
எங்கே போனார்
இந்த யோகி?

சரி....
இனிமேலாவது
சந்ததிகள் பெருக்க
இயற்கை கற்றுத் தந்த வித்தையைக்
காதல் என்ற பெயரில்
கொச்சைப்படுத்தாமல் இருப்போம்....

-ஞானசேகர் (போகி)

(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துக்கள்.

J S Gnanasekar said...

போகி நினைத்தவை:

ஊனம் உடைத்தது - ஐன்ஸ்டீன்
சாதியைச் சவுக்கால் அடித்தது - அம்பேத்கார்
மதம் மறந்தது - ராஜீவ் காந்தி
எல்லை தாண்டியது - கே.ஆர். நாராயணன்
கருவிகள் செய்தது - ஸ்டெதெஸ்கோப்
பதவி துறந்தது - எட்வர்ட் VIII
உயிர்விட்டது - பலபேர்
தற்கொலை செய்தது - ஸ்டாலினின் மனைவி
வயது மறந்தது - சல்மான் ருஸ்டி
குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது - டூமாஸ்

-ஞானசேகர் (போகி)

தனி காட்டு ராஜா said...

//காமம் இலக்கில்லை என்றால்
எவனும் பயணிக்க மாட்டான்
காதல் பாதையில்....

ஆயுதம் இருப்பதாகக்கூறி
எண்ணெய் தேடுவது போல
காதல் இருப்பதாகச் சொல்லி
காமம் தேடுகிறீர்கள்....//


அருமையான வரிகள் ....உண்மையும் கூட....